Grab the widget  IWeb Gator

Thursday, June 30, 2011

Why some girls not intrested in sex?

சில பெண்களுக்கு இயல்பிலேயே தாம்பத்ய உறவில் அவ்வளவாக நாட்டமிருக்காது. இதற்கு காரணம் அவர்களிடம் இருக்கும் கூச்ச சுபாவம். சிறுவயதில் இருந்தே ஆண் பெண் உறவை பற்றி பெரியவர்கள் சொல்லிக்கொடுத்த விதமும் செக்ஸ் என்றாலே பெண்களிடம் ஒரு வித வெறுப்பினை ஏற்படுத்தி விடுகின்றன. உறவைப் பற்றிய தவறான மனப்பான்மை, தேவையற்ற பயங்கள், மூட நம்பிக்கைகள் போன்றவையும் பெண்களது இப்பிரச்சினைக்குக் காரணங்கள்.

முதல் உறவின் போது இரத்தம் வெளிப்படும் என்பதில் தொடங்கி குழந்தை பிறப்பதில், பிரசவ வலியில் உள்ள தேவையற்ற பயங்களும் இதற்குக் காரணங்களாக அமையலாம். உறவின் போது கணவன் ஒரே மாதிரியான நிலைகளைக் கையாள்வது அல்லது கண்மூடித்தனமாக ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகளாலும் மனைவிக்கு உறவின் மீது மீது வெறுப்பு ஏற்படலாம். இருபத்தைந்து சதவிகிதப் பெண்கள் தாம்பத்திய உறவில் ஈடுபாடு இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கிறது ஒரு மருத்துவ ஆராய்ச்சி முடிவு .

கூட்டுக்குடும்ப பிரச்சினை

கூட்டுக் குடும்பங்களில் இருக்கிற பெண்கள் பலர் இப்பிரச்சினையால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு. நிறைய பேர் சூழ இருப்பதால் யாராவது தம்மைக் கவனித்து விடுவார்களோ என்ற பயத்தில் அந்தரங்க உறவைத் தவிர்க்கவும், வெறுக்கவும் செய்வார்கள்.குழந்தை பெற்றுக் கொண்டால் இளமையும், அழகும் போய் விடும் என்று பயப்படும் பெண்கள், அதன் விளைவாக உறவு கொள்வதையே தவிர்ப்பார்கள்.

உடலுறவு என்பது அவர்களைப் பொறுத்தவரையில் கணவன் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம் என்று நினைப்பார்கள். இந்நிலையில் அந்தப் பெண் உறவை வெறுக்கவும் மாட்டாள். அதே சமயம் அவளால் அதை முழு இன்பத்துடன் அனுபவிக்கவும் முடியாது. செக்ஸில் நாட்டமில்லாப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்களில் சிலருக்கு உச்சக்கட்டம் என்பதே சாத்தியமாகாது. விருப்பமிருந்தாலும்கூட இப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலருக்கு உறவுக்கு உடல் இடம் கொடுக்காது. இணங்காது. அதனாலேயே உறவின் மீது அனாவசிய வெறுப்பு ஏற்படும்.

எதிர்பார்ப்பு தரும் ஏமாற்றம்

திருமணத்திற்கு முன்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு வரப்போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவு களும், கற்பனைகளும் இருக்கும். திருமணத்திற்குப் பிறகு அந்தக் கற்பனைகள் பொய்யாகும்போது, தனக்கு வாய்த்த கணவனின் குணங்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக அமையும்போது, தாம்பத்திய உறவில் ஈடுபாடு குறைவதாக தெரிவிக்கிறது அந்த ஆய்வு.

சில குடும்பங்களில் ஆண் குழந்தை பெறும் பெண்களுக்குத் தான் மதிப்பு. ஒரு வேளை தனக்கு ஆண் குழந்தை பிறக்காமல் போய் விடுமோ என்ற பயத்தில் உறவிலிருந்து தப்பிக்க ஏதேதோ காரணங்களைச் சொல்லித் தப்பிக்கும் பெண் களும் உண்டு. நாளடைவில் அதுவே நிரந்தரமாகி விடும்.கணவனது தோற்றத்தில் திருப்தியில்லாத பெண்களும், தன் கணவனுக்கு தன்னையல்லாத வேறொரு பெண்ணுடன் உறவு உள்ளது என்று தெரிய வரும் பெண்களும்கூட தாம்பத்திய உறவைத் தவிர்ப்பார்கள்.

கணவன் மீதான வெறுப்பு

தன் கணவன் தன்னிடம் அன்பாக, அனுசரணையாக நடந்து கொள்ளாத பட்சத்திலும், அவனுக்குத் தன்னைத் தவிர வேறு பெண்களுடன் உறவு இருப்பதாகவும் உணரும் பெண்கள்,கணவனின் மீதான வெறுப்பைக் காட்ட அவர்கள் நாடும் ஒரே வழி அதுவாகத்தான் இருக்கும்.தாம்பத்திய உறவில் நாட்டமின்மை என்பது எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலருக்கு குறிப்பிட்ட நபர்களுடன் உறவு கொள்ள வேண்டி வரும் போது நாட்டமின்றிப் போவதும், தனக்கு விருப்பமுள்ளவர்களுடன் உறவு கொள்ளும் போது பிடித்துப் போய் இணங்குவதும் உண்டு.

அழகு பற்றிய விமர்சனம்

அதேபோல தாம்பத்திய உறவின் போது, தனது உடல் ஊனங்களும், அழகும், இயலாமையும் தன் கணவனால் அநாகரிகமாக விமர்சிக்கப்பட்டாலோ, குறை கூறப்பட்டாலோகூட அந்தப் பெண் விரக்தியடைந்து தாம்பத்திய உறவை வெறுக்கிறாள். திருமணமாகிக் குழந்தை பெற்ற பிறகு சில வருடங்களில் தம்பதியருக்கிடையேயான நெருக்கம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறை யக்கூடும்.

திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணமான புதிதிலோ தன் வாழ்க்கைத் துணையிடம் பிடித்திருந்த ஒரு சில விஷயங்கள் காலப் போக்கில் பிடிக்காமல் போகலாம். இதனாலும் உறவில் ஈடுபட வெறுப்பு ஏற்படலாம். இதனால் தனக்கு அதில் ஆர்வமே இல்லாதது போல நடிப்பார்கள். தலைவலி, மார்பகங்களில் வலி, மார்பகங்களின் அளவுகளைப் பற்றிய கவலை, உடல்வலி, மயக்கம், உறவின் போது ஏற்படும் ஒருவிதப் படபடப்பு, அளவுக்கதிக வியர்வை போன்றவற்றால் பாதிக்கப்படும் பெண்களுக்கு செக்ஸில் வெறுப்பு வருவது சகஜமான ஒரு விஷயம்.

தாம்பத்திய உறவில் நாட்டமின்மை என்பது தீர்க்க முடியாத குறையில்லை என்கிறது மருத்துவம். கணவனது பக்குவமான அணுகுமுறை, மனைவியிடமான அவனது நடத்தை, உடல் மற்றும் மன சுகாதாரம் போன்றவையும் இப்பிரச்சினையைக் குணமாக்கும் சிகிச்சைகளில் முக்கியமாம். மருத்துவரிடம் கேட்கத் தயங்கிக் கொண்டு இதை அப்படியே விட்டு விடுவது தவறு என்கின்றனர் உளவியலாளர்கள்
                                                                                                                                                                      

Friday, June 17, 2011

அகிலத்தில் இஸ்லாத்தை ஏற்ற முதல் பெண்மணிஅன்னை கதீஜா (ரலி)



أم المؤمنين خديجة بنت خويلد رضي الله عنها
பிறப்பு

அன்னை கதீஜா (ரலி) அவர்கள் கி.பி. 556 ஆம் ஆண்டு மக்காவில் பிறந்தார்.
இவரது தந்தை குவைலித் பின் அஸத்.
தாயார் பாத்திமா பின்த் ஸாஇதா இவருக்கு இரு சகோதரிகள். அவர்கள் ஹாலா பின்த் குவைலித், ருகையா பின்த் குவைலித் ஆகியோராவர்.
கதீஜா (ரலி) அவர்கள் அன்றைய மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றவராகத் திகழ்ந்தார்கள்.
இவர் அறபிகளால் மதிக்கப்படும் உயர் குலத்தைச் சேர்ந்தவர்.
பெண்களிடம் அவசியம் இருக்க வேண்டிய ஒழுக்கத்தை நிறைவாகவே பேணி வாழ்ந்து வந்ததால் ‘தாஹிரா’ – பரிசுத்தமானவள் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டு வந்தார்கள்.
‘அல்-அமீன்’, அஸ் ஸாதிக்
அந்தக் கால கட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் பல கூட்டத்தினரோடும் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டு வந்தனர். அவற்றில் நபி (ஸல்) அவர்களின் நேர்மையான நடைமுறைகள், நீதியான கொடுக்கல் வாங்கல்கள் மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டன. அப்போது நபி (ஸல்) அவர்களை அம்மக்கள் ‘அல்-அமீன்’ – நம்பிக்கையாளர் என்றும் “அஸ்ஸாதிக்” உண்மையாளர் என்றும் அழைத்தனர்.
வியாபாரத்தில் நேர்மை நாணயம்நபியவர்களின் நேர்மை, நாணயம் அறிந்து தமது வியாபாரச் சரக்குகளை விற்கும் பொறுப்பைக் கவனித்துக் கொள்ளுமாறு நபியவர்களை அழைத்து, வணிகத்திற்காக அனுப்பி வைத்தார்கள் கதீஜா (ரலி) அவர்கள். அதற்கிணங்க நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களின் வியாபாரப் பொருட்களை விற்றுக் கொடுத்தார்கள்.

கதீஜா (ரலி) அவர்களது வயது நாற்பதை எட்டி இருந்தாலும் அவர்களின் செல்வச் செழிப்பின் காரணமாகப் பெரும் பெரும் செல்வச் சீமான்களைத் திருமணம் முடித்திருக்க முடியும். ஆனால், தனக்குக் கீழ்ப் பணியாளராக வேலை செய்த நபி (ஸல்) அவர்களைத் திருமணம் முடித்து இவ்வுலகிற்கு அழியாத முன்மாதிரியை வழங்கினார்கள்.

ஒரு பெண் தனது வருங்காலக் கணவனை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு கதீஜா (ரலி) அவர்கள் ஒரு சிறந்த முன்மாதிரி. ஒரு மனிதன் எவ்வளவு கெட்டவனாக இருப்பினும் அவனிடம் பணமிருந்தால் அவனுக்குப் பெண் கொடுக்கப் பெருங் கூட்டம் தயாராகிவிடும். அவனைக் கணவனாக அடைய எத்தனையோ பெண்கள் ஆசைப்பட்டு விடுவார்கள். பணத்திற்காக எதையும் தாங்குவேனென்று பணக்காரனையே மணவாளனாகக் கொள்ள நினைப்பதுண்டு.

இந்நிலைக்கு முற்றிலும் மாறுபட்டு கதீஜா (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள். பொன்னையும் பொருளையும் ஒதுக்கி வைத்துவிட்டு நீதி, நேர்மை நிறைந்த, உண்மையுரைக்கின்ற, உயர் பண்புகளுக்குச் சொந்தக்காரார் ஆகிய நபிகள் நாயகத்தை மணமுடித்தார்கள்.

இதனால், கதீஜா (ரலி) அவர்களின் வாழ்க்கை மகிழ்வோடு கழிந்தது.கதீஜா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் மூலமாக காஸிம், அப்துல்லாஹ் (தாஹிர், தையிப்), ஸைனப், உம்மு குல்ஸூம், பாத்திமா, ருகையா ஆகிய குழந்தைகள் பிறந்தார்கள்.

இவ்வாறு நபி (ஸல்) அவர்களுக்குப் பிறந்த நான்கு பெண் குழந்தைகள் மற்றும் காஸிம் என்ற ஆண் குழந்தை ஆகியோர் விடயத்தில் அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு இல்லை. எனினும், அப்துல்லாஹ், தாஹிர், தையிப் ஆகியோர் தொடர்பில் வரலாற்று அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு நிலவுகின்றது.

மூன்று பேரும் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் என்று சிலர் குறிப்பிடுவர். அப்துல்லாஹ் என்ற குழந்தையே தாஹிர், தையிப் என்றவாறும் அழைக்கப்பட்டாரென்று சிலர் கூறுகின்றனர். காஸிம் என்ற ஆண் குழந்தையைத் தவிர கதீஜா (ரலி) அவர்களுக்கு வேறு ஆண் குழந்தைகள் பிறக்கவில்லை என்று மற்றும் சில வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

திருமணம்

கதீஜா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் திருமணம் முடிக்க முன்னர் அபூ ஹாலா பின் ஸுராரா என்பவரையும், அவருக்குப் பின்னர் அதீக் பின் ஆயித் என்பவரையும் திருமணம் முடித்திருந்தார்.

அவர்களிருவரும் மரணித்த பின் கதீஜா (ரலி) அவர்கள் விதவையாகக் வாழ்ந்து வந்தனர்.அன்னை கதீஜா (ரலி) அவர்கள் மிகப்பெரிய செல்வச் சீமாட்டியாகத் திகழ்ந்தார்கள்.

மக்கா மாநகரிலிருந்து சிரியா போன்ற வெளிநாடு களுக்குச் சரக்குகளை ஏற்றிச் செல்லும் அனைவரின் ஒட்டகங்களின் சுமைகளைவிட கதீஜா (ரலி) அவர்களின் சரக்கு ஒட்டகங்கள் மிகைத்திருக்கும். அந்தளவுக்கு வாணிபம் செய்து அரபுலகம் போற்றும் சிறந்த தொழிலதிபராகவும், வணிக மேதையாகவும் திகழ்ந்தார்கள்.

நபியவர்கள் வியாபாரத்தில் மட்டுமன்றி, அனைத்து துறைகளிலும் மிக நேர்மையாக நடந்து கொண்டதால் மக்கள் அவர் மீது உயிரையே வைத்திருந்தனர். நற்குணங்களின் உறைவிடமாகத் திகழ்ந்த நபியவர்கள் அனைவரையுமே மதித்து நடந்தனர். இதனால், நபியவர்களது அருங்குணங்கள் மக்கள் மத்தியிற் பரவ ஆரம்பித்தன.அவர்கள் வணிகத்தில் அதற்கு முன் எவருமே ஈட்டாத அளவு இலாபத்துடன் நாடு திரும்பினார்கள்.

நபி (ஸல்) அவர்களுடன் வியாபாரத்திற்காகச் சென்ற மைஸரா என்ற அடிமை மூலம் நபி (ஸல்) அவர்களின் நன்னடத்தை பற்றி மேலும் அறிந்து கொண்டார்கள் கதீஜா (ரலி) அவர்கள். இதனால், நபி (ஸல்) அவர்களை மணமுடிக்க விரும்பினார்கள். அப்போது கதீஜா (ரலி) அவர்களின் வயது நாற்பதை எட்டியிருந்தது. நபி (ஸல்) அவர்களின் வயதோ இருபத்தைந்தாக இருந்தது.

பிள்ளைகள்

நபியவர்களைத் திருமணம் முடிக்க முன்னர் கதீஜா (ரலி) அவர்கள் ஏற்கனவே முடித்திருந்த அபூ ஹாலா மூலமாக ஹிந்த், ஹாலா ஆகிய பெண்களுக்கும், அதீக் என்ற கணவர் மூலமாக ஹிந்த என்ற பெண் பிள்ளைக்கும் தாயாக இருந்தார்.

அபூ ஹாலாவிற்குப் பிறந்த ஹிந்த், ஹாலா ஆகிய இருவரும் இஸ்லாத்தைத் தழுவினார்களா இல்லையா என்பது பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை. எனினும், அதீக் என்பவருக்குப் பிறந்த ஹிந்த் என்ற பெண் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக இமாம் தாரகுத்னி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்களின் பிள்ளைகள் பற்றி

காஸிம், அப்துல்லாஹ் (தாஹிர், தையிப்) ஆகியோர் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்பே இறந்து விட்டனர். ஏனையோர் கதீஜா (ரலி) அவர்கள் இறந்த பின்பு சில காலம் உயிர் வாழ்ந்தனர்.

இவர்களில் ருகையா (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு மரணித்தார்கள். ஸைனப் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டும் உம்மு குல்ஸூம் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டும் மரணித்தனர். மேற்படி மூவரும் நபி (ஸல்) அவர்கள் உயிர் வாழும் போதே மரணித்து விட்டார்கள்.

எனினும் பாத்திமா (ரலி) அவர்கள் மாத்திரம் நபி (ஸல்) அவர்கள் வபாத்தாகி ஆறு மாதங்களின் பின் மரணித்தார்கள்.

கதீஜா (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றல்

கதீஜா (ரலி) அவர்களின் வயது 55 ஆகவும், நபி (ஸல்) அவர்களின் வயது இருந்த வேளை அது.

நபி (ஸல்) அவர்கள், சீர் கெட்டு, வழி தவறி, இருளில் மூழ்கிக் கொண்டிருக்கும் சமுதாயத்தை எண்ணிக் கவலைப்படுகிறார்கள். அத்தகைய சமுதாயத்தைச் சீர் செய்வ தெப்படி, அவர்களை ஒளியின்பால் இட்டுச் செல்வதெப்படி என்றெல்லாம் பலவாறு சிந்திக்கத் தலைப்பட்டார்கள். அவ்வேளை நபி (ஸல்) அவர்களது உள்ளத்திற்குத் தனிமை மிகவும் பிரியத்தைக் கொடுத்தது.

எனவே, இறைவனை வணங்கி வழிபட அமைதியான தனிமையான இடம் நாடி ஹிராக் குகைக்குச் சென்றார்கள். அங்கு பல இரவுகள் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டனர்.இவ்வாறு, நபி (ஸல்) அவர்கள் குகையிற் தங்கி வணக்கத்தில் ஈடுபட்ட வேளையில் அவர்களுக்குத் தேவைப்படும் உணவுகளைத் தயார் செய்து கொடுக்கும் பணியை கதீஜா (ரலி) அவர்கள் மிகவும் கனிவுடன் செய்து வந்தார்கள்.

குகை, ஹிரா மலையின் உச்சியிலேயே அமைந்திருந்தது. பாதையோ மிகவும் கரடு முரடானதாகக் காணப்பட்டது. இப்படியிருந்தும் தமது முதுமைப் பருவத்தையும் பொருட்படுத்தாது சிரமத்துடன் நடந்து சென்று அன்னை கதீஜா (ரலி) அவர்கள் உணவளித்ததைப் பெண்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் ஹிராக் குகையில் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் முன் தோன்றி ‘இக்ரஃ’ (ஓதுவீராக!) என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எனக்கு ஓதத் தெரியாது” என்றனர்.

பின்னர் நபி (ஸல்) அவர்களை இறுகக் கட்டித் தழுவினார்கள். இவ்வாறு மூன்று முறை செய்தார்கள். பின்னர் ஓதுவீராக என்று கூறி மீண்டும் நபி (ஸல்) அவர்களைக் கட்டித் தழுவிவிட்டு 96 ஆம் அத்தியாயமாகிய “அல்-அலக்” கின் ( اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِى خَلَقَ * خَلَقَ الإِنْسَانَ مِنْ عَلَقٍ * اقْرَأْ وَرَبُّكَ الأَكْرَمُ ) இக்ரஃ எனத் துவங்கும் முதல் ஐந்து வசனங்களையும் ஓதிக் காட்டினார்கள்.

அவற்றை நபி (ஸல்) அவர்களும் அப்படியே ஓதினார்கள். பின்பு ஜிப்ரீல் (அலை) அவர்கள் சென்று விட்டார்கள். இந்நிகழ்வால் அதிர்ச்சியடைந்து பயந்து நடுங்கிய நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களிடம் வந்து « زَمِّلُونِى زَمِّلُونِى » “என்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள்” என்று கூறினார்கள்.

கதீஜா (ரலி) அவர்கள் போர்த்திவிட்ட பின்னர் நபி (ஸல்) அவர்கள், நடந்த சம்பவத்தை விளக்கினார்கள். பின்னர் தமக்கு ஏதும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்று அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா (ரலி) அவர்கள் தமது கணவருக்கு மிக அழகான முறையில் ஆறுதல் கூறி மன தைரியத்தை ஊட்டினார்கள்.

கதீஜா (ரலி) அவர்கள் கூறிய வார்த்தைகள் வருமாறு:
فَقَالَتْ خَدِيجَةُ ” كَلاَّ وَاللَّهِ مَا يُخْزِيكَ اللَّهُ أَبَدًا ، إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ ، وَتَحْمِلُ الْكَلَّ ، وَتَكْسِبُ الْمَعْدُومَ ، وَتَقْرِى الضَّيْفَ ، وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ
“அவ்வாறு கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் ஒருபோதும் உங்களை இழிவுபடுத்த மாட்டான். நீங்கள் உங்கள் உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்கள். (சிரமப்படுவோரின்) சுமைகளைச் சுமக்கிறீர்கள். ஏழைகளுக்காக உழைக்கிறீர்கள். விருந்தினரை உபசரிக்கிறீர்கள். சோதனைகளில் (சிக்கியோருக்கு) உதவி புரிகிறீர்கள்” என்று கூறிப் பயந்திருந்த உள்ளத்திற்கு உண்மையான வார்த்தைகளைக் கொண்டு ஆறுதல் கூறினார்கள்.

அதுமட்டுமல்ல; அந்நிகழ்ச்சியின் உண்மையான விளக்கம் என்னவென்பதைக் கேட்டறிய வேண்டும் என்பதற்காகத் தமது தந்தையின் சகோதரர் வறகா பின் நௌபல் என்பவரிடம் சென்று கேட்டறிந்து கொள்ளலாம் என்று ஆறுதல் கூறினார்கள். ஏனெனில், அவர் இன்ஜீல் வேதத்தை நன்கு அறிந்து வைத்திருந்த கிறிஸ்தவராகக் காணப்பட்டார்.

எனவே, கதீஜா (ரலி) அவர்களது ஆலோசனையை ஏற்ற நபி (ஸல்) அவர்கள், கதீஜா (ரலி) அவர்களுடன் வறகா பின் நௌபல் وَرَقَةَ بْنَ نَوْفَلِ என்பவரிடம் வந்து நடந்ததை எடுத்துக் கூறி விளக்கம் கேட்டனர்.

அதற்கு அவர் “முஹம்மதிடம் வந்தவர் வானவர் ஜிப்ரீல் (அலை) ஆவார். முஹம்மதை அல்லாஹ் தனது தூதராகத் தெரிவு செய்துள்ளான். يُخْرِجُكَ قَوْمُكَ . فَقَالَ رَسُولُ اللَّهِ – صلى الله عليه وسلم – « أَوَمُخْرِجِىَّ هُمْ » உங்களை மக்கள் ஊரை விட்டு வெளியேற்றுவார்கள்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எனது கூட்டத்தினர் என்னையா வெளியேற்றுவார்கள்” என்று வியப்புடன் கேட்டார்கள்.

அதற்கு . قَالَ نَعَمْ ، لَمْ يَأْتِ رَجُلٌ قَطُّ بِمِثْلِ مَا جِئْتَ بِهِ إِلاَّ عُودِىَ ، وَإِنْ يُدْرِكْنِى يَوْمُكَ أَنْصُرْكَ نَصْرًا مُؤَزَّرًا “ஆம், அப்போது நான் உயிரோடு இளைஞனாக இருந்தால் உங்களுக்கு மிகப் பெரிய அளவில் உதவிடுவேன் என்று கூறினார்”. (புகாரி:3, அறிவிப்பவர் ஆயிஷா(ரலி) (வரகா அவர்கள் சிறிது காலத்தில் இறந்து விட்டார்கள்)¨

அச்சத்துடனும் திடுக்கத்துடனும் வீடு திரும்பிய கணவனை அன்போடு ஆறுதலளித்து அரவணைத்து நின்ற விதத்தை இன்றைய பெண்கள் சிந்திதுப் பார்க்க கடமைப்பட்டுள்ளனர்.

¨ தன்னைப் போர்த்திவிடுமாறு கூறியபோது, ஏன், எதற்காக, உங்களுக்கு என்ன நடந்தது என்று பதறியடித்துக்கொண்டு அதிரடியான கேள்விகளைத் தொடுத்து அவரைத் திக்குமுக்காடச் செய்யாது பதற்றம் நீங்கும்வரை நபி (ஸல்) அவர்களைப் போர்த்திவிட்டு ஆறுதல் கூறிக் கொண்டே இருந்தார்கள்.

¨ தமது பதற்றம் நீங்கிய பின்னர் தாமாகவே தமக்கு என்ன நடந்தது என்று கூறும் வரை பொறுத்திருந்து சூழ்நிலையறிந்து நடந்து கொண்ட விதம், தன் கணவர் மீது அவர் வைத்திருந்த அன்புக்கு எடுத்துக் காட்டாகும்.

¨ தனக்கு ஏதும் ஆபத்து வந்துவிடுமோ என்று நபி (ஸல்) அவர்கள் அஞ்சுவதாகக் கூறியபோது நபி (ஸல்) அவர்களிடம் காணப்பட்ட அருங் குணங்களையும் நல்லறங்களையும் சுட்டிக் காட்டிய விதமானது, அன்னை கதீஜா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையையும் மரியாதையையும் தெளிவுபடுத்துகின்றது.¨

கதீஜா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு ‘அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை ஒருபோதும் இழிவுபடுத்த மாட்டான்’ என்று ஆணித்தரமாகக் கூறியது அன்னாரது இறை நம்பிக்கைக்குப் பெரும் சாட்சி.

¨ இந்நிகழ்ச்சியின் உண்மையான விளக்கம் என்ன என்பதை அறியத் தம் கணவரை வேதம் அறிந்த ஒருவரிடம் அழைத்துச் சென்றது கதீஜா (ரலி) அவர்களின் அறிவின் ஆழத்தைத் தெளிவாகக் காட்டுகிறது.

ஏனெனில், தன் குடும்பத்தில், சமுதாயத்தில், தனக்கு நெருக்கமான, நம்பிக்கையான எத்தனையோ பேர் இருந்தும் வேதமறிந்த ஒருவரிடம் அழைத்துச் சென்றது நிகழ்வின் யதார்த்தத்தை ஓரளவு புரிந்து கொள்ளும் மனப் பக்குவமும் அறிவும் கதீஜா (ரலி) அவர்களிடம் காணப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டுகின்றது.

இந்நிகழ்ச்சியின் பின்னர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ஒரு இறைத் தூதர் என்ற உண்மையை உணர்ந்து ஏற்றுக் கொண்டார்கள். எனவே, முஹம்மத் (ஸல்) அவர்களை நபி என்று ஏற்றுக் கொண்ட முதல் பெண்மணியாகக் கதீஜா (ரலி) அவர்கள் திகழ்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “மக்கள் என்னை நிராகரித்த போது அவர் என்னை ஏற்றுக் கொண்டார். மக்கள் என்னைப் பொய்யாக்கிய போது அவர் என்னை உண்மைப்படுத்தினார். மக்கள் எதையுமே எனக்குத் தராது தடுத்துக் கொண்ட போது அவர் தமது சொத்துக்களை எல்லாம் எனக்காக அர்ப்பணித்தார்” [அஹ்மத், 16: 118].

மேற்கூறப்பட்ட அனைத்து விடயங்களையும் கதீஜா (ரலி) அவர்களின் வாழ்விலிருந்து அனைவரும், குறிப்பாகப் பெண்கள் படிப்பினையாகப் பெற்றிடல் வேண்டும்.இந்நிகழ்ச்சியில் கதீஜா (ரலி) அவர்கள் நடந்து கொண்ட விதமானது, பெண்ணினத்துக்குப் பல முன்மாதிரிகளைத் தருகின்றது.

கதீஜா (ரலி) அவர்களின் சிறப்பு

எவ்விதச் சலனமுமின்றி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முதல் மனிதராகிய கதீஜா (ரலி) அவர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக நபி (ஸல்) அவர்களோடு தோளோடு தோள் நின்று உழைத்தார்கள். அவர்களின் தஃவாக் களத்தில் தன்னையும் பங்காளியாக இணைத்துக் கொண்டார்கள். தமது செல்வத்தையெல்லாம் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காகவும் பிரச்சாரப் பணிக்காகவும் தியாகம் செய்தார்கள்.

இவ்வாறு இஸ்லாத்திற்காக உடலாலும் பொருளாளும் உள்ளத்தாலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்கள். கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புப் பற்றி ஏராளமான நபி மொழிகள் காணப்படுகின்றன.

அவற்றிற் சில வருமாறு:

உலகிற் சிறந்த பெண்மணி
عَنْ عَلِىٍّ – رضى الله عنهم – عَنِ النَّبِىِّ – صلى الله عليه وسلم – قَالَ « خَيْرُ نِسَائِهَا مَرْيَمُ ، وَخَيْرُ نِسَائِهَا خَدِيجَةُ »
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “இவ்வுலகிற் சிறந்த பெண் மர்யம் (அலை) ஆவார். இவ்வுலகிற் சிறந்த மற்றொரு பெண் கதீஜா (ரலி) ஆவார்” [அறிவிப்பவர்: அலி (ரலி), ஆதாரம்: புகாரி 3432, முஸ்லிம் 4815].¨

கதீஜா (ரலி) அவர்களின் குடும்பத்தினரை நபி (ஸல்) அவர்கள் மதித்து நடந்தார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “கதீஜா (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பின் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களிடம் வருவதற்கு கதீஜா (ரலி) அவர்களின் சகோதரி ஹாலா பின்த் குவைலித் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். அவருடைய குரல் கதீஜா (ரலி) அவர்களின் குரலைப் போன்று இருந்ததால் கதீஜா (ரலி) அவர்கள் அனுமதி கோருகிறார்கள் என்று எண்ணி நபி (ஸல்) அவர்கள் மகிழ்ச்சியுற்றார்கள்.

பிறகு அவருடைய சகோதரி என்று தெரிந்த போது ‘என் இறைவனே! இவர் ஹாலா’ என்று கூறினார்கள். இதனைக் கேட்ட நான் பொறாமைப்பட்டேன். ‘காலத்தால் அழிக்கப்பட்ட பல் விழுந்த குறைஷிக் கிழவிகளில் ஒருவரையா இவ்வளவு நினைவு கூருகிறீர்கள். நிச்சயமாக அவர்களை விடச் சிறந்த ஒருவரை அல்லாஹ் உங்களுக்குத் தந்துள்ளான்’ என்று கூறினேன்” [நூல்: புகாரி 382, முஸ்லிம் 4824].

மற்றுமொரு அறிவிப்பில், “‘அல்லாஹ் உங்களுக்கு வயது முதிர்ந்தவர்களையும் சிறிய வயதினரையும் கொடுத்துள்ளான்’ என்று நான் கூறியபோது நபி (ஸல்) அவர்கள் கோபமுற்றார்கள். அப்போது நான், ‘உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பியவன் மீது ஆணையாக! இதன் பிறகு அவர்களைப் பற்றி நல்லதைத் தவிர வேறு எதையும் கூற மாட்டேன்’ என்று கூறினேன்” என்றுள்ளது. [அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: அஹ்மத், தபரானி]¨

கதீஜா (ரலி) அவர்களின் நேசர்களை நபி (ஸல்) அவர்கள் மதித்தல்

”ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் கதீஜா (ரலி) அவர்கள் மீது பொறாமைப்பட்டது போல எவர்மீதும் நான் பொறாமைப்பட்டதில்லை. நானோ அவர்களைப் பார்த்ததுகூடக் கிடையாது. எனினும் நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களை அதிகமதிகம் நினைவுகூருவார்கள். ஒரு ஆட்டை அறுத்தால் அதைப் பங்கிட்டு கதீஜா (ரலி) அவர்களின் தோழிகளுக்கும் அனுப்பி வைப்பார்கள்.

சில நேரங்களில் நான் எரிச்சல் பட்டு “உங்களுக்கு உலகத்தில் கதீஜாவை விட்டால் வேறு பெண்களே இல்லையா” என்று கேட்பேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அந்தப் பெண்மணி இன்னின்னவாறு இருந்தார்” என்று அவர்களின் நற் பண்புகளைக் கூறுவார்கள். மேலும், “அப்பெண்மணியின் மூலம்தான் எனக்குக் குழந்தைகளும் கிடைத்தன” என்றும் கூறுவார்கள். [புகாரி: 3818]¨

கதீஜா (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் ஸலாம் கூறல்
عَنْ أَبَي هُرَيْرَةَ قَالَ أَتَى جِبْرِيلُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَذِهِ خَدِيجَةُ قَدْ أَتَتْكَ مَعَهَا إِنَاءٌ فِيهِ إِدَامٌ أَوْ طَعَامٌ أَوْ شَرَابٌ فَإِذَا هِىَ أَتَتْكَ فَاقْرَأْ عَلَيْهَا السَّلاَمَ مِنْ رَبِّهَا عَزَّ وَجَلَّ وَمِنِّى وَبَشِّرْهَا بِبَيْتٍ فِى الْجَنَّةِ مِنْ قَصَبٍ لاَ صَخَبَ فِيهِ وَلاَ نَصَبَ
ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! இதோ கதீஜா. அவர் தன்னுடன் குழம்பு, உணவு, பானம் ஆகியவை நிறைந்த பாத்திரத்தை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். அவருக்கு என் சார்பாகவும் அவரின் இறைவன் சார்பாகவும் ஸலாமை எடுத்துச் சொல்லுங்கள். சொர்க்கத்தில் அவருக்கு சச்சரவு, துன்பங்கள் இல்லாத, முத்தாலான மாளிகையுண்டு என்ற நற்செய்தியையும் சொல்லுங்கள்” என்று கூறினார். [அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி 3820, 7497, முஸ்லிம் 4817]¨

சுவனத்தைக் கொண்டு நன்மாராயம்

நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களைப் பற்றி அதிகம் நினைவு கூர்ந்தால் நபி (ஸல்) அவர்களின் வேறு எந்த மனைவியின் மீதும் பொறாமைப்படாதளவு நான் கதீஜா (ரலி) அவர்கள் மீது பொறாமைப்படுவேன். அவர்கள் இறந்து மூன்று ஆண்டுகள் கழித்து என்னை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்தார்கள்.

அல்லாஹ்வும் ஜிப்ரீல் (அலை) அவர்களும் கதீஜா (ரலி) அவர்களுக்குச் சுவர்க்கத்தில் முத்து மாளிகையுண்டு என்ற நற்செய்தியை அவருக்குத் தெரிவியுங்கள் என்று கட்டளையிட்டார்கள். [அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 3817, முஸ்லிம் 4820]

மரணம்

நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்க்கையில் 10 வருடங்கள் வாழ்ந்து தமது 65 ஆம் வயதில் கி.பி. 621 இல் மரணித்தார்கள்.

அதே ஆண்டில்தான் இஸ்லாத்தை ஏற்காவிட்டாலும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கைக்குப் பெரும் துணையாக இருந்த அவரது சிறிய தந்தை அபூ தாலிப் அவர்களும் மரணித்தார்கள்.

சிறிய தந்தையினதும் ஆருயிர் மனைவி கதீஜா (ரலி) அவர்களினதும் மரணத்தால் நபி (ஸல்) அவர்கள் சொல்லொணாத் துயரத்திற்காளானார்கள். நபி (ஸல்) அவர்கள் மட்டுமன்றி இஸ்லாமிய உலகமே சோகத்தில் மூழ்கியது.

இஸ்லாமிய வரலாற்றில் இவ்வாண்டு ஆமுல் ஹுஸ்ன் (عام الحزن துக்க ஆண்டு) என அழைக்கப்படுகிறது. அல்லாஹ் அவர்களைக் கொண்டு திருப்தியடைந்து மேலான சுவர்க்கத்தை வழங்குவானாக!

(நன்றி : மனாருல்ஹுதா)
கதீஜா (ரலி) - முக்கியக் குறிப்புகள்
பெயர்: கதீஜா பின்த குவைலித்
சிறப்புப் பெயர்: தாஹிரா(தூய்மையானவர்)
தந்தை பெயர்: குவைலித் இப்னு அஸத்
தாயார் பெயர்: பாத்திமா பின்த் ஸாயிதா
கணவர்கள்: 1.அபூஹாலா இப்னு ஸுராரா 2.அதீக் இப்னு ஆயித் 3. முஹம்மத் (ஸல்)
குழந்தைகள்: 3 பேர் (ஹிந்த, ஹாலா (முதல் கணவர் மூலம்) & ஹிந்த (2-வது கணவர் மூலம)
குழந்தைகள்: 6 பேர் (1.காஸிம், 2.அப்துல்லாஹ் (தையிப், தாஹிர்) (நபி மூலம்) 3.ஸைனப், 4.ருகையா, 5.உம்மு குல்தூம் 6.பாத்திமா (நபி மூலம்)
சகோதரிகள்: 1.ஹாலா பின்த் குவைலித் 2.ருகையா பின்த குவைலித்
பிறந்த ஊர், தேதி: மக்கா, கி.பி. 556. ஹிமு 68
இறந்த ஊர், அடக்கம்,தேதி: மக்கா, ஜன்னத்துல் முஅல்லா,(ரமளான் மாதம்) கி.பி.621
திருமணம் நடந்த ஊர் : மக்கா. ஹிமு 28.
மஹர்: இருபது ஒட்டகைகள் ஹிமு 3
குடும்ப வாழ்க்கை: 25 ஆண்டுகள்